Search This Blog in tamil

Sunday, 16 May 2021

காமமும் கடவுளே...

 காமமும் கடவுளே...


காதல் என்பது பொய்

காமம் என்பதே மெய்

வேண்டுமென்றால் கேட்டுப் பாருங்கள் தமிழ் கூட சாட்சி சொல்லும்

சங்கத்தமிழில் 'காதல்' எனும் வார்த்தையே இல்லை.


காதல் புனிதம்

காமம் பாவம் 

என ஏமாற்றியது போதும்


காமதேவனை எரித்த சிவன்

காமாட்சி தேவியை அணைத்துக் கொண்டானே ஏன்?

ஏனெனில் காமம் புனிதமானது.


தன் காமத்தை கடவுளுக்கு

 நிவேதனம் செய்த

ஆண்டாளைக் கேளுங்கள்

காமம் எவ்வளவு புனிதமானதென்று.


கோபியர் கொஞ்சும் 

ரமணனை கேளுங்கள் 

காமம் எவ்வளவு புனிதமென்று


காமம் இயல்பானது

அன்பின் பாய்ச்சலது

ஆண்டவனின் அருளது

இருத்தலின் இயல்பது

உயிரின் தன்மையது

உலகத்தின் இயக்கமது

ஊடலின் கூடலது

எண்ணங்களில் வலியது அது

எல்லோருக்கும் பொதுவானது அது

ஏவாலுக்கும் இருந்தது அது

ஐராவதத்தின் ஆற்றலது

ஒருமைக்குள் இருமை கரைக்கும் விந்தையது

ஓங்காரமாய் ஒலிக்கும் பிரபஞ்ச தழுவலின் -ரீங்காரமது


கடவுளை அடையும் ஏணியின் முதல்படி காமம்.

காமம் கையாளத்தெரியாத கலையாகிப் போனதால் ,கூடலில் பிறந்தோரெல்லாம் 'பாவி'யென தீர்ப்பெழுதி நீரில் முக்கி பேரைமாற்றி ரட்சிக்கப்படும் வழக்கமெலாம் மேற்கை சார்ந்தது.


கிழக்கு எப்போதும் நுட்பமானது.கிழக்கிலே எல்லாம் புனிதம்...


தன்னை திருப்திபடுத்தும் ஆடவன் எவன் உளன்? என நிர்வானமாக நாடெங்கும் சுற்றியலைந்த பெண்ணின் சவாலை ஏற்று அச்சவாலை வென்று அவளுக்கு ஆடை அணிவித்ததன் ரகசியத்தை 'ரதிரகசியம்' எனும் நூலில் கூறிய கொக்கோக முனிவரும்


காமத்தில் எவ்வளவு நுட்பமுள்ளதென ஆய்ந்து ஒரு யோக நூலுக்கு இணையாக சாஸ்திரம் வடித்த வாத்யசாயனாரும்,


காமத்தின் வழியும் கடவுளை அடையும் மார்க்கமென விஞ்ஞான் பைரவ் தந்த்ரா மூலம் நிறுவிய எம் இறைவன் சிவனும்


விளக்கமே தேவையில்லை நம்மாளு கண்ணனும்,


கடவுளை அடையும் வழியெல்லாம் காமச்சிற்பங்களை அமைத்து,காமத்தை கடக்காமல்(கடத்தல் வேறு....தவிர்த்தல் வேறு)

கடவுளை அடைய இயலாதென நிறுவும் காஜிராஹோ கோவிலும்


சான்றுசொல்ல போதுமானது காமம் புனிதமானதென்று.


சதை பிண்டத்தில் சாகசம் காட்டுவது காமமல்ல;

வரைமுறை தாண்டி வாழ்க்கையை அழிப்பது காமமல்ல;

தலைக்கேறிய போதையாய் தடுமாறுவது காமமல்ல;

பயன்படுத்திவிட்டு பந்தாடுவது காமமல்ல;

ஆர்ப்பரித்து அரை நொடியில் அடங்கிவிடுவதல்ல காமம்;


காமம் என்பது சக்தி பிரவாகம்.

படைப்புத்திறனின் பரிசளிப்பு.

பரிமாறுதல் பழகாதவரை காமம் பாவமாகவே புரிந்து கொள்ளப்படும்.


அறிவியலில் கூட காமம் உள்ளது.

நேர்மின்னோட்டமும் எதிர் மின்னோட்டமும் இணையும் போது எரியும் மின்விளக்கு காமமன்றி வேறென்ன?


புரோட்டான் எனும் ஆடவனை சுற்றி வரும் எலக்ட்ரான் பெண்ணும்

இவ்விரண்டும் பிரிய நேர்ந்தால் பிரித்த இடத்தையே பொசுக்கித்

தள்ளும் அணுகுண்டுவும் காமம் தான்.


கடலை கூடும் நதி

மண்ணைத் தேடும் மழை

பள்ளம் தேடி பாயும் வெள்ளம்

அழுத்ததாழ்வை அணைக்கும் காற்று

பரமனை தேடும் பக்தன்

பக்தனை  தழுவும் பரமனென


ஒவ்வொரு மிகுதியும் குறைவும் கூடி குழாவி கொஞ்சி 

தம்மை நிறைத்து சமமாக்கி நிறைவுபெறும்

 முயற்சியே காமம்.அதுவே வாழ்வின் தத்துவம்.


படைத்தல்,வாழ்தல்,வீழ்தல் எனும் முத்தொழிலும் ஒரே நேரத்தில் நிகழும் இறை விளையாட்டு காமம்.


காமத்தை சரியாக புரிந்து கொண்டால்

ஒரு கண்ணசைவு போதுமானது.......

காமத்தை சரியாக புரிந்து கொண்டால் 

ஒரு புன்னகை போதுமானது.....


காமத்தை புரிந்து கொண்டவன் இழப்பதன் மூலமே அடைந்து விடுவான்.

கொடுப்பதன் மூலமே பெற்றுக்கொள்வான்.


காமமென்பது ஒருமை காணும் உணர்வு;

தன்னை கரைப்பதற்கான பேரவா;

சரணாகதியின் சாரம்;

துவைதத்தில் ஆரம்பித்து அத்வைதத்தில் முடியும் பரமானந்தம்.


ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் மூன்றாகும் அற்ப வித்தையல்ல காமம்.

ஒன்றும் ஒன்றும் ஒன்று சேர்ந்தபின் ஒன்றாகி பின் அவ்வொன்றையும் கரைந்து பூஜ்யமாக்கும் ஆயக்கலைகளில் அற்புத கலை அது.


காமத்தில் வென்றவனுக்கு மட்டுமே தெரியும் காமம் புனிதமானதென்று.

தலைக்கணகத்தை தரையிறக்கியவனுக்கே புரியும் காமம் புனிதமானதென்று.


ஒவ்வொரு ஆணுக்குள் இருக்கும் பெண்ணையும்,பெண்ணுக்குள் இருக்கும் ஆணையும் அறிமுகம் செய்வது காமம்.

அப்புது ஆணும் பெண்ணும் இணைவதே ஏகாந்தம்.


முழுமையும் அப்படி தன்னைத்தானே கூடி கிளர்ந்தபோது உச்சத்தில் முனகிய சத்தமே பெருவெடிப்பு.அக்கூடலால் பிரசவித்த பிள்ளையே பிரபஞ்சம்.


காமத்தில் வெல்ல..சில குறிப்பு.


அவசரம் ஆபத்து

ஆற்றலை சேமி

இழத்தலே இன்பம்

ஈசனை நினை

உடலை கட

உயிரில் நிறை

ஊக்கம் தேவை

ஊடலும் தேவை

எல்லாம் புனிதம்

ஏதும் தவறில்லை

ஐம்பொறியும் உதவும்

ஒழுக்கம் மற(அப்போது மட்டும்)

ஓங்கும் பரசவம்.


காமம் செப்பாது 

கண்டது மொழிகிறேன்

காமம் புனிதமானது.


பகிர்வு பதிவு..


வாழ்க வளத்துடன் 🙏 நன்றி நற்பவி


No comments:

Post a Comment