மனைவியை உச்சமடையச் செய்வது எப்படி?
ஆணுறுப்பால் சிந்திக்கும் அரைவேக்காட்டுத்தனமான ஆங்கில வழிகளைப் பின்பற்றினாலோ, 'வாத்ஸ்யாயனர் எழுதிய 'காமசூத்ரா' -வைப் படித்துவிட்டு, காரியத்தில் இறங்கினாலோ, உச்சமடைவதில் உங்களுக்கு முழுத்தோல்வி உறுதி!
காதலுணர்வின்றி, ஆணுறுப்பால் சிந்தித்து இயங்கும் ஆங்கில வழிக் காமமானது, வெறும் உடல் சார்ந்த விலங்கினக் காமம்!
இவ்வாறு விலங்குகள்போல்,
• ஆணுறுப்பு ஒன்றின் துணை கொண்டே கலவி கொள்வார்,
• மனைவியின் ஒப்புதலையோ அல்லது அவரது காதலுணர்வையோ பொருட்படுத்தாத
குரூர வல்லுறவு விலங்குகள்! அத்தகைய மனிதர்களால் ஒருக்காலும் மனைவியை உச்சமடையச் செய்ய இயலாது!
தனது ஆணுறுப்பால் தூண்டப்பட்டு,
• அறிவற்ற விலங்கின இன்பத்தை மட்டுமே குறியாகக் கொண்டு,
• காமக் கழிப்பிடமாக பெண்ணுடலைப் பயன்படுத்தும்
விலங்கு-நிலையில் காமம் நுகரும் மாந்தருக்கு உச்சமெல்லாம் ஒரு பொருட்டே இல்லை!
• அஃறிணை உயிர்களின் காதல் கல்லாக்காமம்! இயற்கைவீறு!
• மொழிபேசும் மக்களினத்தின் காதலோ,
o விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்து,
o நினைவில் இனித்து, அறிவில் விளங்கிக் -கலவியில் வளர்வது’
என்பார் அறிஞர் வ சுப மாணிக்கனார்.
பெண்களைப் போகப் பொருளாகச் சித்தரிக்கும் 'காமசூத்ரா' போன்ற நூல்களைப் படித்துவிட்டு உச்சம் தேடும் மனித விலங்குகள் உச்சத்தின் பொருளை அறியாதவர்கள்!!
'காதல் இருவர் கருத்து ஒருமித்து - ஆதரவு பட்டதே இன்பம்!' என்பது பெண்ணில் பெருந்தக்க பெண்பாற் புலவரின் கருத்து! இது உச்சமடைதலையும் உள்ளடக்கியது!
'காமம்' என்பது "மனிதம் போற்றும் உணர்வுள்ள நல் மனிதர்களுக்கு" வள்ளுவர் சொன்னது!
உச்சமடையும் காமம் மலரினும் மெல்லிது !
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார் - திருக்குறள்: 1289
வள்ளுவம் சொன்ன 'மலரினும் மெல்லிய காம'த்தின் 'செவ்வி தலைப்பட்டு, மனைவியுடன் உச்சமடையும்' உட்பொருள் அறிவோம்!
'மென்மலரைக் காட்டிலும் மிக மென்மையான காமத்தின் இயல்பறிந்து, நுகர்ந்து செவ்வி தலைப்பட்டு உச்சமடையக் கூடியவர்கள் இவ்வுலகில் சிலரே' என்று ஏன் குறிக்கின்றார் வள்ளுவர்?
அலுவல் பணி காரணமாக, வெகுநாள் வெளியூர் சென்ற தலைவன் மனைவியுடன் அளவளாவிக் கூடும் ஆவலில் வீடு திரும்புகிறான்;
பெண்மை நிறைந்த பொலிவுடன் விளங்கும் மனைவி அவனை நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பார்த்த மகிழ்ச்சியில் திளைக்கிறாள்.
கணவனைக் காணவந்த சுற்றமும், நட்பும் வரவேற்று, மனைவி பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருப்பதால், கணவனும், மனைவியும் ஒருவரையொருவர் நெருங்கிக் கொள்ளமுடியாத சூழல் நிலவுகிறது!
காதலர் இருவரின் கண்களும் ஒருவருக்கொருவர், ஒருவர் செல்லும் பக்கமெல்லாம் மற்றவரின் கண்கள் பின்சென்று சுழன்று கொண்டிருக்கின்றன.
கணவன் ஏற்றுக்கொண்ட அலுவலுக்காகவோ, பொருளீட்டும் கட்டாயத்தாலோ விடைபெற வந்தபோது,
செல்லாமை உண்டேல் எனக்குஉரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க்கு உரை (- திருக்குறள்:1151:பிரிவாற்றாமை)
என்ற குறள்-நிலையில் கரைந்து போன மனைவியானவள்,
தன்னிடம் பேசக்கூட நேரமில்லாமல், இவ்வளவு காலம் தன்னைப் பிரிவுத் துன்பத்தில் ஆழ்த்தியதற்காக தகணவனுடன் சிறுசண்டையிட வேண்டும் என்றவள் நினைத்தாலும், அவள் மனம் கணவனிடம் ஊடல் செய்ய மறுக்கிறது!
['நல்வரவு' கேட்டிருக்கிறோம்! அதென்ன குறள் நாயகி சொன்ன 'வல்வரவு'? "நீ பிரிந்து செல்லப்போவதில்லை என்றால் மட்டும் அதை எனக்குச் சொல்! மாறாக, நீ பிரிந்து சென்றால், உன் பிரிவே என்னைக் கொன்றுவிடும்! என் சாவு நேர்ந்தது எவ்வாறு என்ற கதையே, நீ திரும்பி வரும் போது கேட்பதற்கு உனக்கு இங்கு மீதமிருக்கும் என்பதால், உன் வரவு, சாவுக்கேட்பு-க்கான 'வல்வரவு' ஆகும்; அக்கதையை உன்னிடம் சொல்வதற்கு வாழப்போகும் ஏனைய சுற்றத்தாரிடம் சொல்லிவிட்டுப் போ!" என்றாளாம் குறள் நாயகி! அவனிடம்தான் எத்துணை அன்பு அவளுக்கு? எத்தனை முறையானாலும், இக்குறளைக் காணும்போதெல்லாம் என் கண்கள் குளமாகும்! ]
கண்களுக்கு மை தீட்டும்போது, கண்களுக்கு மிக அருகில் இருக்கும் Eye-Brow(எழுதுகோல்) கண்களுக்கு தெரியாததுபோல், கணவன் தொலைவில் இருக்கும்போது அவன் பிரிவே பெருங்குறையாகத் தெரிந்தது!
ஆனால், அவனை நேரில் கண்ட பின்னால், தன்னையும் மீறி, கணவனிடம் இழுத்துச்செல்லும் அன்பின் முன்னால், தனது ஊடல் உதவாது என்பதை உணர்கிறாள் மனைவி.
"எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட விடத்து"
என்ற புணர்ச்சிவிதும்பல் குறள் எண்: 1285-க்கான இலக்கணமானாள் மனைவி.
என்னதான் கணவனின் பிரிவால் துன்புற்றிருந்தாலும், நேரில் கண்டதும், ஊடலையும் மீறி, அவனுடன் கூடும் விருப்பத்தையே நாடுகிறதே மனம் என்று வியக்கிறாள் மனைவி!
கணவனோ, தன்னுடன் பேசக் கூட நேரமில்லாமல் பல சூழல்களில் இருந்ததை மனைவி சுட்டிக் காட்டும்போது, தனது அன்பான மௌனப் பார்வையால் மன்னிப்புக் கோரும் அன்புப் பார்வை மலர்களை மனைவிக்குச் சூடி, 'சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை' என்று மனைவியின் உள்ளத்தை அள்ளுகிறான்; மனைவியிடம் நெருக்கமாக அளவளாவும் செயலைத் திறம்படச் செய்கிறான்.
இவ்வாறு, அன்புநிலை சூழும் நெருக்கத்தை உருவாக்குகிறான். காமம் என்பது, காதலர் இருவர் உள்ளமும் பிணக்கு சிறிதும் இன்றி ஒன்றிய நிலையில், அன்பு கொண்டு தழுவி வாழும் இன்பநிலையைக் குறிக்கும்!
மனைவியுடன் நுகரும் காம இன்ப உணர்வு மிக மென்மையானது. அது உயிரைத் தளிர்க்கச் செய்யும் என்று
உறுதோ றுயிர் தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள் - திருக்குறள் : 1106
என்று சொல்கிறார் வள்ளுவர்.
பொருந்தும் போதெல்லாம் உயிர் தளிர்க்கும்படியாகத் தீண்டுதலால் இவளுக்குத் தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும்) என்று சிறப்பித்து வள்ளுவர் கூறியுள்ளார்.
M.B.B.S.,M.D.,D.M.,Ph.D., போன்ற பட்டங்கள் பெற்ற தேர்ந்த உளவியல் அறிஞர்கள் தரும் ஆலோசனைகளைக் காட்டிலும் மேலான உளவியல் செய்தியை -
• "உச்சமடைய, கலவியல் உணர்வுகளை மலரைப்போல மென்மையாகக் கையாளவேண்டும்"
என்று கவிதையாகச் சொல்கிறது திருக்குறள்.
உளவியலின் உளப்பகுப்பாய்வுச் சிந்தனை முறையை நிறுவிய ஆஸ்திரிய உளநோய் மருத்துவர் சிக்மண்ட் பிராய்டின்(Sigmund Freud) உளப்பகுப்பு ஆய்வுகள்,
"மனித நடத்தையின் வினோதங்களுக்குப் பெருங்காரணம் கலவியல் மன எழுச்சிகளே",
என்று கூறுகின்றன.
ஆணும் பெண்ணும் உளப்பூர்வமான ஒத்துழைப்போடு காமஇன்பத்தில் ஈடுபடும்போது சிக்கல் தோன்றுவதில்லை.
விலங்குகள், பறவைகள் மற்றும் நீர்வாழும் உயிரினங்களின் காமம் காதல் சார்ந்து இருக்க வேண்டியதில்லை.
மாறாக, மனிதகுல மாந்தர்கள் கொள்ளும் காமம் உயர்வான காதலுணர்வின் உச்சமாகும்;
ஐம்புலன்களாலும் ஒருசேர உணர்ந்து உயிரே போற்றக்கூடிய காதலுணர்வின் உச்சகட்ட வெளிப்பாடாக அமைவது.
காதல் ஒருமித்துக் கலவியில் ஈடுபடும் காதலர்
• உள்ளத்தால் ஒன்றி,
• ஒருவரை ஒருவர் உள்ளத்தால் காயப்படுத்தாமல்,
• ஒருவர் தன்னை மற்றவருக்கு முழுவதுமாக அளித்து,
• அந்த அர்ப்பணிப்பில் தன்னை இழந்து மற்றொருவரில் கரைந்துபோவதே,
இந்த காதலுணர்வால் விளையும் உயர்ந்த காமத்தின் தெய்வீகச் சிறப்பு!
அத்தகைய செவ்விச் சிறப்பினைத் தரும் அந்த காம உணர்வு மலரினும் மெல்லிது.
செவ்வி தலைப்படுதல் துய்க்கும் முறைமை!
காதலுணர்வால் விளையும் காமம் மட்டுமே,
• அதாவது எதிர் பாலினரை வருத்தாது,
• அவரது இணக்கத்துடன் விளையும் காமம் மட்டுமே
போற்றத் தகுந்தது.
இத்துணை அழகுடன் விளையும் இன்பத்தில் மட்டுமே
• ஒருவன் தன்னை இழந்து,
• அந்த இழப்பில் இன்பமும்
காண்கிறான்.
வண்டு மலரின் இதழ்மேல் இருந்தோ, சுற்றிப் பறந்தோ, தேன் சுரக்கும் காலம் அறிந்து, அந்த இதழ் கூட மடியாமல், அதை நுகரும்.
அதுபோல காம இன்பத்தை அதன் காலம், இடம், பக்குவம் முதலியன அறிந்து செவ்வி தப்பாமல் துய்க்கவேண்டும்.
அப்படி செவ்வியறிந்து அனுபவிக்கும் திறனும் வாய்ப்பும் கொண்ட அறிவு சிலருக்கே அமைந்துள்ளன.
• காதலுடன் கூடிய காமம் மலரைவிட மென்மையானது, நுட்பமானது, நளினமானது.
• அதன் தன்மையை அறிந்தவரே காமத்தின் முழுச் சுவையினையும் முழுப்பயனையும் நுகர்ந்து உச்சமடைவர்
என்பது இக்குறளின் உட்கருத்து.
மிகவும் நுண்ணியதாகிய காம இன்பத்தை, பெரும்பான்மையான மனிதர்கள், முரட்டுத்தனமான முறைகளில் அனுபவிக்க முயன்று, அதன் செவ்வியை இழக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டித் தவறான காம நுகர்ச்சிகளைத் தவிர்க்கச் சொல்லுவது இப்பாடல்.
'செவ்வி' என்பதன் பொருள் என்ன?
• 'உலகத்து வண்டாவது மலர் சிதையாமல் மதுவை அருந்துவதுபோல காமத்தின் செவ்வி அறிந்து அதனைக் கைக்கொண்டு உச்சம் அடையவேண்டும்'
என்ற பொருளில் சிறப்பான ஒரு விளக்கம் அளித்தார் காளிங்கர்.
• '‘செவ்வி’ என்றால் பக்குவம். காலம், இடம், நிலை, தன்மை, படிநிலை, ஆகியவற்றிற்கேற்ப ஒழுகும் பக்குவம்.
• காமத்தின் கூறுகளான காதல், ஊடல், உணர்தல், புணர்தல் ஆகிய அனைத்திலுமே மென்மையும் பக்குவமும் இன்றியமையாதவை.
இதனை உணர்ந்து ஒழுகுதலே செவ்வி தலைப்படுதல்' என்று விளக்குகிறார் உரையாசிரியர் கு ச ஆனந்தன் அவர்கள்.
உச்சத்தில் புதுமை!
செவ்வி என்பதற்கு
• அழகு, காலம், பருவம், தகுதி, ஏற்ற சமயம், காட்சி, வாசனை, தன்மை என்பதோடு,
• புதுமை என்றும் பொருள் உண்டு.
காமம் பயின்று உச்சமடைய விழையும் காதலர் இருவருக்கும்,
• ஒவ்வொரு நாளும், புதியதாக, புதுப்புதுச்சுவை அனுபவிப்பதாக இருக்கும்.
புதுப்புது உச்சம் அறியும்போது வெளிப்படும் அறியாமை!
,இவ்வாறு புதுமையான உச்சமடையும் உணர்வு தரும் காரணிகளாக,
கணவனிடமோ, மனைவியிடமோ இருக்கும் உள்ளார்ந்த குணம் அல்லது, அன்பு மிகுதியாலே ஒருவர் மற்றவரிடத்தில் காணும் புதுமை போன்றவை கூட இருக்கலாம்.
ஒவ்வொருமுறையும் காதலின்பத்தின் புதிய பரிமாணத்தை, சுவையைக் கண்டதும், கணவன்-மனைவி இருவரும் அவர்களது அறியாமையைத் தெரிந்துகொள்வர்.
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு - திருக்குறள்: 1110-புணர்ச்சி மகிழ்தல்
ஒரு பொருளை அறிய, அறிய, கற்பவனின் அறியாமை புலப்படுவது போல,
• தலைவி என்னும் அற்புத நூலை அறிய அறிய, தலைவனின் அறியாமை வெளிப்படுகிறது என்பதே வள்ளுவர் சொல்லும் செவ்வி அறிதல்.
செவ்வியான உச்சம் உண்டாகாவிட்டால், ஆண்-பெண் இருவரிடையே நிகழ்வது விலங்குப் புணர்ச்சியாகவோ, விலைப் புணர்ச்சியாகவோ, வன்புணர்ச்சியாகவோ, பொருந்தாப் புணர்ச்சியாகவோ இருப்பதற்கு ஒப்பாக முடிந்துவிடும்;
பசியால் வாடிக் காய்ந்தமாடு கம்பங்கொல்லையில் விழுந்து, விழுந்து தின்னுவதுபோலக் காம இன்பம் விரைவாகத் துய்க்க ஆசைப்பட்டால், அந்த மகிழ்ச்சி நீடிக்காது.
காதலர் இருவரும் ஒருவரையொருவர் நுகர்ந்து துய்த்து, துணையின் முழுத் துய்ப்புக்கும் முயன்று, ஈடுகொடுத்து, ஒருவருக்கொருவர் ஆட்பட்டு, ஆட்படுத்திய 'செவ்வி' கொண்ட இன்ப நுகர்வாக இருக்காது.
இடமும், காலமும், நுட்பமும் அறிந்து, ஐம்புலனும் ஒரு-புலனாய் உச்சத்தைத் தொடும் அந்த இன்பத்தைத் துய்க்கவேண்டும். இவ்விதம் காமம் துய்க்கும்போது செவ்வி தலைப்படும் உச்சம் அடைதல் நிகழும்!
கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள - (குறள்:1101-புணர்ச்சி மகிழ்தல்.)
1. ஓவியம் போன்ற சிலவற்றைக் காண்பதால் (கண்டு) இன்பம்;
2. இசை போன்ற சிலவற்றைக் கேட்பதால்(கேட்டு) இன்பம்;
3. அறுசுவை உணவு போன்ற சிலவற்றை உண்பதால்(உண்டு) இன்பம்;
4. திருக்குறள், தூயகாற்று போன்ற சிலவற்றை உயிர்ப்பதால்(உயிர்த்து) இன்பம்;
5. பெற்ற-குழந்தையை ஆசையுடன் அள்ளி-அனைத்து உற்றறிவதால்(உற்று) இன்பம்;
• ஐம்புலன்கள் தரும் ஐவகை இன்பங்களும் ஒன்றாய்க் கூடி உச்சம்தரும் ஒரே அற்புதம் மனைவி!
• மனைவியின் உள்ளத்தை கொள்ளை கொண்ட கணவனால் மட்டுமே மனைவியை உச்சமடையச் செய்ய முடியும்!
'செவ்வி' என்ற சொல்லுக்கு ஏற்றகாலம் என்பது பொருத்தமான பொருள்.
மலரினும் மெல்லிய 'காணொளி'
இதோ கவிஞர் வாலியின் "செவ்வியுடன் உச்சமடைவதை விளக்கும் ஓர் மலரினும் மெல்லிய காமத்தைப் பாடலிலும், காட்சியிலும் மென்மையாக வெளிப்படுத்திய மக்கள் திலகம் எம்ஜிஆர்-சரோஜாதேவி அவர்கள் நடித்த 'அரசகட்டளை' திரைப்படப் பாடல் உங்களுக்காக:
https://www.youtube.com/watch?v=OLnqdfeVxm4
"தலைவன்: புத்தம் புதிய புத்தகமே!
உன்னைப்புரட்டிப் பார்க்கும் புலவன் நான்!
பொதிகை வளர்ந்த செந்தமிழே -
உன்னைப்பாட்டில் வடிக்கும் கவிஞன் நான்!
தலைவி: பள்ளியறை என்னும் பள்ளியிலே
இன்றுபுதிதாய் வந்த மாணவி நான்!
ஏட்டைப் புரட்டிப் பாட்டைப் படிக்கும்
வீட்டுப் புலவன் நாயகி நான்!
பள்ளியறை என்னும் பள்ளியிலே
இன்றுபுதிதாய் வந்த மாணவி நான்!
ஏட்டைப் புரட்டிப் பாட்டைப் படிக்கும்
வீட்டுப் புலவன் நாயகி நான்!
தலைவன்: அஞ்சு விரல் பட்டாலென்ன?
அஞ்சுகத்தைத் தொட்டாலென்ன? (தொடக்கம்: கை-தீண்டல்)
தலைவி: தொட்ட சுகம் ஒன்றா என்ன?
துள்ளும் உள்ளம் பந்தா என்ன? (கை-தீண்டலில் உள்ளம்-உருகல்)
தலைவன்: செவ்விதழைக் கண்டால் என்ன?
தேனெடுத்து உண்டால் என்ன? (இதழ்-வேண்டல்)
தலைவி: கொத்து மலர் செண்டா என்ன?
கொஞ்சும் மன்னன் வண்டா என்ன? (வேண்டலில் சீண்டல்)
புத்தம் புதிய புத்தகமே!
உன்னைப்புரட்டிப் பார்க்கும் புலவன் நான்!
பொதிகை வளர்ந்த செந்தமிழே - . .
தலைவன்: கையணைக்க வந்தால் என்ன?
மெய்யணைத்துக் கொண்டால் என்ன? ( மெய்-தீண்டல் )
தலைவி: முத்த மழை என்றால் என்ன?
சொர்க்கம் ஒன்று உண்டா என்ன? (இதழ்-பொருந்தி உயிர் உருகல்)
தலைவன்: வெட்கம் வரும், வந்தால் என்ன?
வேண்டியதைத் தந்தால் என்ன? (இணை-சேர்தல்)
தலைவி: இன்னும் கொஞ்சம் சொன்னால் என்ன?
இன்பம் இன்பம் என்றால் என்ன? (உச்சமடைதல்)
புத்தம் புதிய புத்தகமே!
உன்னைப்புரட்டிப் பார்க்கும் புலவன் நான்!
பொதிகை வளர்ந்த செந்தமிழே -"
காமம் மலரைவிட மென்மையானது; பக்குவம் அறிந்து அதனைத் துய்த்து உச்சம் அடைவது எவ்வாறு என்று அய்யன் திருவள்ளுவரும், அரசகட்டளை திரைப்பாடலின் காணொளிக் கவிதையும் உணர்த்தும் பாடம் அறிந்து பயன் பெறுக!
நன்றி: பொன். தங்கராஜ்
வாழ்க வளத்துடன் 🙏 நன்றி நற்பவி
No comments:
Post a Comment